People I know

Sunday, October 29, 2006

மழை ஏன் பெய்கிறது?

எவ்வளவோ ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தாலும் மழை ஏன் ஒரு இடத்தில் பெய்கிறது அல்லது பெய்வதில்லை என்பதை மனிதர்களால் அறிய முடியவில்லை. மழை எப்படி பெய்கிறது என்பதை வள்ளுவனுக்கு முன்பே நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. ஆனால் திடீரென்று ஒரு இடத்தில் மாதக்கண்க்கில் மழையின்றி இருப்பதற்க்கும் திடீரென்று கரை கம்மாயெல்லாம் கரைப்புரண்டு ஓடும் அளவும் மழை பொழிவதற்க்கும் உண்டான காரணிகளை கணிக்க முடியாமல், மனிதனின் விஞ்ஞான ஆறிவு இயற்கையிடம் தோற்று நிற்கிறது. இது மட்டும் சரியாக தெரிந்தால் மழைக்கு கூட "time table" போட்டு விடுவோம் என்பதால் இறைவன் சில விஷயங்களை இரகசியமாகவே வைத்திருக்கிறான் போலும்.

வள்ளுவனிடம் கேட்டால் கற்புக்கரசிகள் சொன்னால் மழை பெய்யும் என்பான். வேதியர்கள் தாங்கள் செய்யும் காயத்ரி ஜபத்தினாலேயே மழை பெய்யும் என்பார்கள். வருண ஜபம் என்ற மந்திரத்தை தூய்மையான அந்தனர்கள் ஜபித்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை அரசர்களிடம் வேரோடிருந்த்தாக கேள்விபட்டிருக்கிறேன். போன நூற்றாண்டின் முற்பகுதியில் கூட தென்மாவட்டங்களின் சமஸ்தானங்களில் (அவையெல்லாம் வானம் பார்த்த பூமியன்றோ?), வறட்சி காலத்தில் வருண ஜபம் செய்ய அந்தணர்கள் அழைக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் ஜபித்து மழை வரவில்லையென்றால் முள்ளின் மீது நின்றுக்கொண்டு கால்களில் இரத்தம் சொட்ட சொட்ட மழை வரும் வரை ஜபிப்பர் என்றெல்லாம் என் நண்பனின் பாட்டி சொன்னதுடன், அவள் கணவரும் அவ்வாறு ஜபிப்பதற்க்கு அழைக்கப்படும் ஒரு வேதவித்து என்று கூறியிருக்கிறாள். விஞ்ஞானமோ மூடநம்பிக்கையோ, எப்படியாவது மழை வந்தால் சரி என்பதே என் கருத்து.

மழைமேகங்கள் தோன்றும் போதெல்லாம் அதை ஒரு பேரதியசயமாக கருதி கற்பனையில் மிதந்து விடுகிறேன். அன்று கூட அதே மயக்கம் தான். இரண்டு தினம் கழித்து சென்னையில் நடந்த ஒரு interview விற்க்கு போகவேண்டியிருந்தது. ஆனால் எப்பொழுதும் போல reserve எல்லாம் செய்யாமல் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

ஆனால் அன்று பார்த்து மழை பலமாக பெய்துக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்த்து சென்னைக்கு தான் ஐந்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறதே ஏதெனும் ஒன்றில் தொற்றிக்கொண்டு விடலாம் என்று தெனாவெட்டு வேறு என்னை யாதொரு கவலையும் இல்லாமல் மேலே சொன்ன மழை ஏன் பெய்கிறது என்ற அதி முக்கியமான ஆராய்ச்சியில் தள்ளிவிட்டிருந்தது. நிதானமாக சாப்பிட்டு இதையே யோசித்துக்கொண்டே ஒரு வழியாக பெரியார் bus stand ஒன்பது மணி போல சென்று சேர்ந்தேன்.

என் கெட்ட நேரம் அன்று ஏதோ முகூர்த்த நாளோ அல்லது பண்டிகையோ (தீபாவளியோ) சரியாக நினைவில்லை, ஆனால் எல்லா வண்டியும் full. சாதாரணமாக இப்படி வந்து நிற்கும் பயணிக்கு ராஜ மரியாதை குடுக்கும் omni bus காரர்கள் என்னை சீந்தக் கூட இல்லை. சிறிது நேரம் கழித்து ஒரு agent ஒருவன் "Madras போனுமா. இப்படி வாங்க" என்று அழத்து போனான். ஏதோ ஒரு பேர் தெரியாத omni காரர்க்ளிடம் இட்டு சென்றான். Bus எதுவும் கண்ணுக்கு தென்படவில்லை ஆனால் ticket போட்டுக்கொண்டிருந்தார்கள் ("230 எடுங்க. ஆமா அம்பது ரூபா extra தான், last minute ல சீட்டு தரோம் இல்ல"). ரொம்ப தூரம் நடந்தே அழைத்து சென்று ஒரு bus குள் விட்டான்.

அந்த வண்டியை பார்த்து அதிர்ந்து விட்டேன். மிக பழசாகயிருந்தது மட்டுமில்லாமல் மழை வேரு உள்ளெ ஒழுகிக்கொண்டிருந்தது. அந்த வண்டி முழுவதும் வடநாட்டவர்கள் இருந்தார்கள். என்னை இன்னும் ஒன்றிரண்டு இளிச்சவாய் தமிழர்களை பிடித்து போட்டு கொண்டிருந்தான் அந்த Agent. வண்டி ஒரு மணி நேரம் (10:30 மணிக்கு) கழித்து எடுத்தார்கள். எனக்கு தெரிந்த "ek gawn mein" ஹிந்தியில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கணவன் மனைவியிடம் விசாரித்த வகையில் வண்டியில் இருக்கும் வடநாட்டுக் கோஷ்டியை ஏமாற்றி 500 ரூபாய்க்கு டிக்கெட் போட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இந்தக் கூட்டம் ஏற்கனவே வேறொரு டுபாக்கூர் பார்ட்டியிடம் அதிக விலைக்க்கு கன்யாகுமாரியோ கொடைகானலோ போயிருக்கிறார்கன் என்பது தெரிந்தது.

ஒரு பதினைந்து நிமிடம் சென்றிருக்கும், வண்டி மேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒருவன் ஹிந்தியில் சத்தமாக கத்த ஆரம்பித்தான். உண்மையில் அவன் மனைவியுடன் சேர்ந்து இராமேஸ்வரம் செல்ல வேண்டியவன். பணத்திற்கு ஆசைப்பட்டு அவனை 1000 ரூபாய்க்கு ஏமாற்றியிருக்கிறார்கள். அவன் பணம் திரும்ப கேட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டான். அவனுக்கு மீண்டும் பெரியார் bus stand போகவும் தெரியாது (மதுரையில் எப்பொழுது 5,6 bus stand கள் யிருக்கும், எனக்கே எந்த ஊருக்கு எந்த பஸ் ஸ்டாண்ட் என்று தெரியாது!). அது போக அவனுக்கு பணத்தை திரும்ப தரும் அதிகாரம் கண்டக்டருக்கு இல்லை என்றும் பஸ் ஸ்டாண்ட் சென்று கம்பெனியில் கேட்டுக் கொள்ளக் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (companyயே டுபாக்கூர், இதில் policy மயிறு வேற என்று எண்ணிக்கொண்டேன்). அவனை நட்ட நடு ரோட்டில் இறக்கி விட்டு விட்டார்கள்.

வண்டி லொட லொட என்று ஒடிக்கொண்டிருந்தது. கொட்டாம்பட்டி அருகே நான் நினைத்தது நடந்தே விட்டது. Bus Break down. இந்த வடக்கத்தியினர் கொந்தளித்து விட்டனர். என்னை போன்ற அப்பாவிகள் மற்றும் எங்கள் ஹிந்தியின் புண்ணியத்தால் அவர்கள் ஏமாற்றப்பட்டதை வேறு தெரிந்துக்கொண்டு விட்டார்கள். நானும் மிகுந்த கோபமடைந்து விட்டேன். பஸ் காரர்களிடம் சென்று எனக்கு நாளைக்கே interview இருக்கிறது என்றும் வண்டி சரியான நேரத்தில் போகவில்லை என்றால் police க்கு போவேனென்றும் கத்தினேன். conductor கண் காட்டவும் இரண்டு தடியர்கள் driver பக்கதிலிருந்து எட்டிப் பார்த்து "என்ன அங்க soundu" என்று கரகரப்பாக கேக்கவும் வடிவேலு பாணியில் சீட்டுக்கே திரும்பினேன்.
என் அருகில் இருந்த சேட் தம்பதிகள் கேட்டதால் அவர்களுக்கு நடந்ததை சொன்னேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ செய்து வண்டியை மீண்டும் எடுத்து விட்டார்கள்.

வண்டி திருச்சியை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. மீண்டும் விஷேஷமான முனங்கல்கள் செய்துவிட்டு நின்று விட்டது. மீண்டு அதே சண்டை. ஆனால் இம்முறை வண்டியை எடுக்க முடியவில்லை. சாலை எல்லாம் மழை வேறு நச நச என்று பெய்துக்கொண்டிருந்தது. பஸ்காரன் இனி வண்டியை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டான். கூட்டத்தார் அவர்களை கொன்று விடுவார்கள் போல இருந்ததால் அவர்கள் பயந்துக்கொண்டு வேறு வண்டியில் ஏற்றிவிடுவதாக சொல்லி போகும் வண்டிகளை நிற்த்த் முயற்ச்சி செய்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஏற்கனவே எல்லா வண்டியும் full ஆக ஓடிக்கொண்டிருந்ததால் யாரும் நிற்கவில்லை. (இவர்கள் fraud கம்பெனி என்பதாலும் கூட இருக்கலாம்).

கொஞ்ச நேரத்தில் ஒரு வண்டிகாரன் நிறுத்தி கொஞ்சம் சீட்டு இருப்பதாக கூறினான். கூட்டத்தில் ஒரு சாரார் முந்திக்கொண்டு ஓடினர், நானும் தான். ஆப்பொழுது என் அருகில் அமர்ந்திருந்த பெண்மனி பெரும் குரலெடுத்து அவர்களை திட்டினாள். எனக்கு interview இருக்கிறது என்றும், அவர்கள் முதலில் எனக்கு ஒரு சீட் பிடித்துக் கொடுத்தே அவர்கள் போக வேண்டும் என்று கூறினாள். அவர்கள் ஏற்றுக்கொண்டு முதலில் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் சொன்னது பொய் என்றும் வயதான வேறு யாரேனும் செல்லலாம் என்று கூறி விட வேண்டும் என்று தோன்றினாலும் அந்த சூழ்நிலையில் அது சரியாக இருக்காது என்பதால் வெட்கம் பிடுங்கி தின்ன முதல் ஆளாக பேருந்தில் அமர்ந்தேன்.

வள்ளுவன் சொல்லிவிட்டான் என்று "பொய்மையும் வாய்மை இடத்து" என்று கூட பொய சொல்லகூடாது, தெரியாமல் தொட்டாலும் தீ சுடவே செய்யும், மனசறிந்து சொல்லும் பொய் நெஞ்சை எரிக்கும் தீ என்று உணர்ந்தேன். இவ்வாறு வள்ளுவனை நினைத்த நேரத்தில் தான் ஏன் அன்று மட்டும் வழி முழுக்க மழை பெய்த்தது என்ற என் முந்தை சிந்தனைக்கு அவன் விடை அளித்திருப்பது தெரிந்தது.

வந்த இடத்தில் தமிழர்களால் பல வகையிலும் ஏமாற்றப்பட்டு சொல்லொணா துயர் அனுபவித்து கொண்டிருந்த அந்த மக்கள் இவ்வளவு பெரிய மனதை கொண்டிருக்கிறார்கள். தன் கஷ்டத்தை மீறி பிறர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் எனக்கு இல்லையே என்று வெட்கமாக இருந்தது. "நல்லார் ஒருவர் உளரேல அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" என்றானே வள்ளுவன். அவர்களால் தான் அந்த நாளில் என்றுமில்லாத திருநாளாய் வழியெங்கும் வருணன் களியாட்டம் புரிந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன்.

Saturday, October 14, 2006

இருட்டிலும் தொடரும் நிழல்

யாருக்கும் அஞ்சாமல் தனிமையில் ஊருக்கு வெளியே புற்றில் வாழும் பாம்பை போல ஒரு சன்யாசியானவன் வாழ வேண்டும் என்பதை அறிவித்ததால் அந்த பாம்பையும் ஒரு குருவாக ஏற்றேன்.
---தத்தாத்ரேயர்.



நம்மை விட்டு நீங்காதது தனிமை மட்டுமே. உலகில் வாழும் மனிதர்களில் சிலர் தனிமைக்கு பழக்கபட்டு அஞ்சாமல் வாழ்கின்றனர். பலர் தன்னுடன் தனிமை இருப்பதை மறுக்க விரும்பி கலந்து வாழ்கின்றனர், ஆனாலும் தனிமை என்பது இருட்டிலும் நம்மை விட்டு பிரியாத நிழல் போல தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது என்பதை யாரும் உணர்ந்தே இருக்கிறார்கள். தனிமையை விரட்டிக் கொள்ளும் யுத்ததில் வேறுவழியின்றி மனிதர் தோற்று மரணத்தை தழுவுவது வாழும் மனிதர்க்கு அதை குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது.

இளவயதில் தனிமை அவ்வளவு துன்புறுத்துவதில்லை என்றே தோன்றுகிறது. தனிமையின் இருப்பை ஏற்க மறுத்து கூடி குலவி இன்பம் துய்ப்பதில் காலம் கரைந்து விடுகிறது. ஆனால் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கும் எதிரியை போல சட்டென முதுமை துணைக்கொண்டு தனிமை ஒருவனை வீழ்த்திவிடுகிறது. தூரத்து உறவினர் ஒருவரை சந்தர்ப்ப வசத்தால் மூப்படைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் பார்க்க நேர்ந்தது. இளவயதில் தனக்கு யாரும் வேண்டாம் என்று கூறி வீட்டை விட்டே வெளியேறியவர் அவர். மிகவும் கோபக்காரர் என்றும் மிடுக்கு நிறைந்தவர் என்றெல்லாம் கேள்வி. ஆனால் தனிமை மூர்க்கதனமாக தாக்கியதால் நைந்த துணி போல இருந்த முதியவ்ர் வயதில் மிக சிறியவனான என் கையை பற்றிக்கொண்டு "என்னை மதுரைக்கு அழைத்து போய்விடு, எனக்கு மனிதர்களே இல்லை. உன் கையை காலாய் நினைத்து பிடித்து கொள்கிறேன், என் உயிர் மனிதர்களுக்கு ந்டுவில் போகட்டும்" என்று கண்ணீர் விட்ட போது வாழ்க்கையில் ஒருவன் சத்தியமாய் சந்திக்க வெண்டிய இந்த தனிமை எதிரியின் வலிமையை உணர்ந்தேன்.


சிந்தித்து பார்த்தால் சில மனிதர்கள் மட்டும் மற்றவர்களை விட மிக அதிகமாக தனிமைக்கு வாக்கப்பட்டு விட்டார்களோ என்று தோன்றும். அவர்கள் கூட்டத்தில் கூட தனியாக தான் இருக்கிறார்கள் என்று தோண்றும். உண்மையில் அவர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாலும் அவர்கள் உள்ளே யாருடனும் சேராமல் இருப்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். புழுங்கரிசி சோறானது எவ்வளவு சாம்பாரில் பிரண்டாலும் சாம்பாரில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதை போல தான் இதுவும்.
எல்லா மனிதர்களும் கூட்டத்திலும் தனிமை என்பதை சில நேரங்களிலாவது அனுபவிக்கவே செய்வார்கள் என்பது என் எண்ணம்.


இதில் சில அலாதி ரகங்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தனித்திருந்து இருந்து தனிமையில் ஒரு சுகம் தோன்றி விடும். ஆனால் அவர்களை முழு மனிதர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். வியாதி வராத மாதிரி அதிகமான எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எப்போதாவது வரும் ஜலதோஷம் கூட விரைவில் குண்மடையாது, எந்த மருந்துக்கும் கேக்காது. தானாகவே போனால் தான் உண்டு. அவர்கள் அப்பொழுது அதிகம் அவதி படுவதை பார்க்க முடியும். அது போல யாருடனும் ஒட்டாத இந்த அதிசய பிறவிகளுக்கு திடிரென்று ஒரு தோழனோ தோழியோ கிடைப்பர். உலக விதிப்படி வருவது எல்லாம் போவது தானே என்று அந்த தோழனோ தோழியோ பிரிந்து விட்டால துவண்டு விடுவர். யாரிடமும் சொல்லி அழ முடியாத பழக்கத்தால் அவர்களுக்கு துன்மானது மேலே கூறிய படி "தானாகவே போனால் தான் உண்டு". ஆகையால் நீங்கள் அலாதி ரகம் என்றால் மொத்தமாக யாரிடமும் ஒட்டாமல் இருங்கள். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.


ஆனால் உண்மையில் தனிமை தவிர்க்க முடியாது என்று அறிந்து யதார்த்தமாக இருப்பவர்களுக்கு தனிமை ஒரு தோழன். ஒரு மனிதன் தன்னை செப்பனிட்டுக்கொள்ள த்னிமை மிகவும் அவசியம். "நீ நல்லவனா கெட்டவனா என்பதை தனிமையில் இருக்கும் பொழுது நீ எப்படி நடந்துக்கொள்கிறாய் என்பதிலிருந்து தெரிந்து கொள்" என்று காந்தியடிகள் சொன்னதாக ஞாயபகம். தனிமையில் இருக்கும் ஒருவன் யாருக்கும் ஜவாப்தாரி இல்லை. அவன் சிந்திக்க நிறைய அவகாசம் கிடைப்பதால் மனதெளிவு அடைய வழி கிடைக்கிறது. சில சித்த தெளிவு ஏற்பட்ட மனிதர்களின் போக்கு வித்தியாசமாக அமைவதை பார்க்கிறோம். அவர்களை சில சமயம் சமூகம் ஒரு பைத்தியமாக கூட பார்க்கிறது. பாரதியார் பட்ட பாடு நாம் யாவரும் அறிந்த்தே. ஆழ்வர்களில் ஒருவர் (குலசேகரர்) கூட "பேயனே எனக்கு யாவரும், யானும் ஒர் பேயனே யாவருக்கும், எதற்க்கு இனி பேச்சு" என்று தன்னால் யாரிடமும் ஒட்ட இயலாது என்று அறிவிக்கிறார். ஆனால் அத்தகைய ஞானியரை தனிமையின் தாக்கம் ஒன்றும் செய்வதில்லை. இந்த பாடு எல்லாம் நம்மை போன்ற சாதாரணனர்க்கே.


மொத்ததில் தனிமை ஒரு விஷேச குணம் கொண்டது. தனிமையை விரும்பி வரவேற்றாலும் அதற்க்கு பிடிக்காது. நெடு நேரம் வெய்யிலில் நின்று பழக்கப்பட்டாலும் சில நொடிகள் நிழலின் அருமை காட்டி மீண்டு வெயிலில் விட்டால் அதிகப்ப்டியாக நிழலுக்கு ஏங்கும் மனம் போல திடிரென சில்லென்று அன்பின் தென்றலை வீசி பின்னர் அதை விலக்கி கலங்கடித்துவிடும். தனிமையை வெறுத்து ஒடுபவர்களுக்கோ தனிமையின் நிழல் பட்டால் போதும் கருகிவிடுவர். விவேகமுள்ளவனோ தனிமையை விரும்புவதும் இல்லை, வெறுப்பதுவும் இல்லை. யதார்த்தமாக இருக்கிறான். அவனிடம் தனிமை தோற்கிறது.


தனித்திரு! விழித்திரு!
-விவேகானந்தர்.

Tuesday, October 03, 2006

பிறவித் துன்பம்.

கரு உண்டாகிய ஐந்து நாள் வரை குழந்தை வட்டமாக நுரை வடிவில் இருக்கும். பத்து நாட்களில் எலந்தப் பழம் போல கட்டியாக இருக்கும். பிறகு மாம்ஸ பிண்டம் போல இருக்கும். முதல் மாதத்தில் தலை உண்டாகிறது. இரண்டாவது மாதத்தில் கை கால் உண்டாகிறது. 3வது மாதத்தி நகம், முடி, எலும்பு, தோல், பிறப்புறுப்பு (Genital organs),காது ஓட்டை, மூக்கு ஓட்டை இதெல்லாம் உண்டாகிறது. நான்காவது மாததிதில் தோல், ரத்தம், மாம்சம், மேதஸ் (?), எலும்பு மஜ்ஜை (bone marrow), சுக்கிலம் என்கிற ஏழு தாதுக்கள் உண்டாகின்றன. ஆறாவது மாதத்தில் கர்ப்ப பையால் சுற்றப்பட்டு அம்மாவின் வயிற்றில் வலப்பக்கமாக சுற்றி வரும்.

ஏஷாவது மாதத்தில் ஜீவனுக்கு ஞானம் கிடைக்கிறது. போன ஜென்மங்களின் தொடர்ப்பு, தான் பிறக்க வேண்டிய காரணம் எல்லாம் தெரிகிறது.
தாய் உண்ணும் உணவு பருகும் பாணங்கள் கொண்டு குழந்தை வள்ர்க்கிறது. குழந்தையின் தொப்புளில் "ஆப்யாயினி" என்ற நாடி கட்டப்படுகிறது, அதன் மறு முனை தாயின் குடலின் ஓட்டையில் கட்டப்படுகிறது. இனி தாயார் சாப்பிட்டது, குடித்தது எல்லாம் குழந்தையின் வயிற்றுக்கும் போய் சேருகிறது.

இவ்விதம் குழந்தை வளரும் குழந்தை ஏராளமான புழுக்கள் உண்டாககூடிய மலம் மூத்திரம் நிரம்பிய குழியில் படுத்திருக்கிறது. அதிலுள்ள புழுக்கள் குழந்தையை கடித்து துன்புறுத்துவதால் குழந்தை அடிக்கடி மயங்குறது. தாய் உண்ணும் உணவில் இருக்கும் உப்பு, உறைப்பு, கசப்பு, தித்திப்பு எல்லாம் குழந்தையை துன்புறுத்தும்.தன்னை சுற்றி கர்ப்பப்பை, மாலை மாதிரி குடல், வளைஞ்ச முதுகு-கழுத்து, வயிற்றில் தலையை வளைத்துக் கொண்டு குழந்தை அங்கேயே கிடக்கிறது. இந்த நேரத்தில் முற்பிறவியின் கதை எல்லாம் தெரிகிறது. ஏழாவது மாதத்தில் பிரசவக் காற்று குழந்தையை அசைக்க தொடங்கும். பத்தாவது மாதத்தில் துன்பம் தீர பிரசவ காற்று தலை கீழாக வெளி தள்ள குழந்தை பிறக்கிறது.

-- மார்க்கண்டேய புராணத்தில் இருப்பதாக சக்தி விகடனில் படித்தது.

நவீன மருத்துவமும் இதையே தான் சொல்கிறது. நான் படித்த "உச்ச தலை முதல் உள்ளங்கால் வரை" என்ற புத்தகத்தில் கூட இப்படி தான் போட்டிருந்தார்கள். முன்னோர்களுக்கு இந்த scanning அறிவு எப்படி கிடைத்தது என்றே தரியவில்லை. நாமெல்லாம் கெட்டவர்கள், அவர்களுடைய scanner ஐ கொடுத்தால் அதை கொண்டு பெண் சிசுக்களை abortion செய்ய மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை கூட தெரிந்து தான் நம்மிடமிருந்து மறைத்து விட்டார்களோ என்னமோ?

பொதுவாகவே ஆன்மீக பாடல்களில் பிரசவத்தில் குழந்தை படும் வேதனைகள் பற்றி பாடி வைத்திருக்கிறார்கள். ஆகையால் மார்கண்டேய புராணத்தில் இடை செருகல் இதெல்லாம் என்றும் சொல்ல கூடியவர்கள் கூட நம் முன்னோர்கள் கர்ப்ப கால கஷ்டத்தை பற்றி தெரிந்து வைத்திருந்தவர்கள் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.