People I know

Tuesday, December 06, 2005

தனிமை, துறவு, ஞானம் - ஒரு அதிக பிரசிங்கியின் உளறல்கள்!

இரவு ஒரு மணிக்கு மேல் pressகாரர்கள் வசதிக்காக விடபடும் கடைசி வண்டியில் கூட footboardல் தொங்கிக்கொண்டு வரும் மும்பை metro இரயில் கூட்டம். இருந்தாலும் அதில் செல்வது கொஞ்சம் பாதுகாப்பானது என்ற காரணத்தாலும், வீட்டில் வெட்டி முறிக்க ஒன்றுமில்லாததாலும் அவன் அந்த வண்டியில் அந்தேரியிலிருக்கும் அலுவலகத்திலிருந்து போரிவிலியிருக்கும் தன் apartment திரும்புவது வழக்கம். ஆமாம், அவன் ரொம்ப வருடங்களாக தனியாகவே வாழ்ந்துக் கொண்டிருப்பவன். ஒருவகையில் அவன் தனிமையை மிகவும் நேசிக்க ஆரம்பித்து விட்டான்.

தனிமை சோர்வு தருவது. தனிமை தளர்ச்சி தருவது. எப்பொழுதோ யாரோ பேசியதை தேவையில்லாமல் ஞாபக படுத்தி அழ வைப்பது. எல்லோரும் தன்னை புறக்கணிக்கிறார்கள் என்னும் சுய பச்சாதாபம் தருவது. எத்தனை நாட்கள் பேசுவதற்கு யாரும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னெப்போதோ பட்ட காயங்களின் வடு மனத்தை அழுத்த கால்கள் போன பாதையில் மணிக்கணக்கில் நடந்து உடலும் மனமும் சோர வீடு வந்து சேர்ந்திருக்கிறான். இவ்வாறு வீணாய் போன எண்ணங்களோடு அன்றிரவும் வண்டி ஏறினான். அன்றைக்கு கூட்டம் அவ்வளவு இருக்கவில்லை.

அவன் compartmentல் ஒருவன் மித மிஞ்சிய போதையில் அமர்ந்திருந்தான். அவன் குடிகாரனை பார்ப்பதை தவிர்க்க முயன்றான். ஆனாலும் முடியவில்லை. திடீரென்று குடிகாரன் அருகில் வந்து சொன்னான் "நீ நல்லவன் வேஷம் ஏன் போடுகிறாய்? உன் மனதில் இருக்கும் வஞ்சம் உன் கண்ணில் தெரிகிறது. அதை மறைக்க முடியுமா?" என்று சத்தமாக சிரித்தான். மனம் எங்கும் கிலி பரவியது. Boriviliல் இறங்கிக் கொண்டான். மணி இரவு 2:00 க்கு மேல் ஆகி விட்டிருந்தது.

வானம் இடித்துக் கொண்டிருந்தது. குடிக்காரன் வார்த்தைகள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அவன் சொன்ன வார்த்தைகள் எவ்வள்வு உண்மையானது. தனக்கு தீங்கு செய்த யாரையும் அவனால் மன்னிக்க முடியவில்லை என்பதும், அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத காரணத்தால் நிகழ்ந்தவைகளை மறக்க முயன்று தோற்பதையும் நினைத்தான். மனம் மிகவும் சோர்வடைந்து வாட்ட தொடங்கியது. அதனை எதிர்க்க துணிந்தான்.

இந்த துன்பத்திற்கெல்லாம் அறியாமையன்றோ காரணம். மனம் என்ற ஒன்று இருப்பதால் தானே மனசோர்வு வருகிறது. மனத்தின் இருப்புக்கு காரணம் "நான்" என்னும் அகந்தை தானே. அகந்தையையும், மனத்தையும் ஒரு சேர அழிக்கும் வழியை யோசித்தான். முன்பொரு முறை பிணம் ஒன்று எரிவதை பார்த்த காட்சி ஞாபகத்திற்கு வந்தது. ஏதோ மந்திரங்கள் ஓதப்பட்டு உடல் அழிக்கப்பட்டது. இனி அந்த ஆத்மா புது உடல் எடுக்கும் என்று எல்லோரும் சொன்னதை நினைத்துக் கொண்டான்.

இனி தானும் மானசீகமாய் எரியூட்டிக் கொண்டு புது பிறவி எடுத்துக் கொண்டால் துன்பங்கள் தொடராது என்று முடிவு செய்தான். அகந்தை காட்டை அழிக்கு நெருப்பு ஞானமே என்று உணர்ந்தான். காரியம் செய்வதற்கு மந்திரங்கள் சொல்ல பாரதியாரை அழைத்தான். அவர் வந்துஅக்கினி வளர்த்து பாடினார்

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.."

என்று சொல்லி மனத்தை எரித்தார். மனமாயை அகன்றது. மழை கொட்டத் தொடங்கியது. சாலையிலிருந்து ஓரிருவர் பாதுகாப்பு தேடி ஒதுங்கினர். இவன் உன்மத்தம் கொண்டு மழையில் ஆடினான்.

"வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைக்கொண்டு விண்ணை
யிடிக்குது கொட்டியிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணை குடையுது காற்று;
சட்டச்ட சட்டச்சட டட்டா - என்று
தாளங் கொட்டி கனைக்குது வானம்."

தான் என்னும் அடையாளம் தொலைந்து போனதால் தான் தான் அனைத்தும் என்பதை உணர்ந்தான். தன்னை தனக்கு அடையாளம் காட்டும் தனிமையை வாழ்த்தினான்.

தனிமை பலம் தருவது.அறிவு தருவது. ஆழ்ந்த ஞானம் தருவது. தனக்கு யாரும் துன்பமே தரவில்லை, தானே தனக்கு தந்துக்கொண்டதிற்கு பிறரை காரணமாக நினைத்து வாழ்ந்ததை நினைத்து சிரித்தான். கடைசியாக அந்த குடிகாரனை வாழ்த்தினான். இனி எப்போதும் துன்பமில்லை இன்பமே என்று வீடு போய் சேர்ந்தான்.